Saturday, September 1, 2012

இலையில் தங்கிய துளிகள்

கால பெருவெளியில் சில பத்துஆண்டுகள்


கரைந்து கழிந்த பின் மீண்டும்

கண்டு செல்ல வருகிறேன் உன்

காதல் திருமுகத்தை



அவ்வண்ணமே பொழியுமாம் பூ

மலிந்த பொன்முகம்

உன் கிராமம் நெருங்க நெருங்க

மார்பு கூட்டில் உயிர் நோகுதடி



நகரா மரங்கள் நகர்வதாகவும்

நகரும் வாகனம் நிலைகொண்டதாகவும்

நீள போய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம் கட்டி ஆடுகின்றன நிறைவேறாத கனவுகள்!!



பட்டு பாவாடையின் காற்றடிப்போடு

பணிவில் திமிர் காட்டும் பார்வைகளோடு

முளைத்தும் முளையா முன்மலர்களை

சண்டையிட்டு முட்டும் சடை ஒதுக்கி,

சலங்கை கட்டிய மான்குட்டியாய்

கலர் தோயாத கலை மேகமாய்

வீதிமரங்களின் பூக்களை திறந்து

ஒட்டுமொத்த நாணத்தை உருண்டை திரட்டி

என்மேல் எறிந்து நீ என்னை கடந்த காலம்

மனசெல்லாம் மார்கழி தான்

தெருவெல்லாம் கார்த்திகை தான்!



ஏலோ எட்டோ இருக்குமா! பழகி

வந்த ஆண்டுகளும் பகிர்ந்து கொண்ட

வார்த்தைகளும்!இன்றேனும் பேசு பெண்ணே

வாங்க !!!!

ஆண்டுகள் தோண்டிய அதே குரல்!

ஆனால் நீ மட்டும் நீ இல்லை :((

வீதி எல்லாம் விசிறி அடித்த அவள் எங்கே?

மழை ஊறிய ஓவியமாய் சாயம் போன நீ எங்கே?

காலம் தன் சவுக்கை பூக்கள்

மீது சொடுக்கமாலிருக்கலாம் !

மீண்டும் வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்

நீயும் நானும்



பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது

உன் அம்மாவின் மரணம் :(

சரத்தின் சருகு சொல்லியது

உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்க தெரியாமல்

பாவமாய் உன் இரு பிள்ளைகள்!



தேநீர் தந்தாய்! பட்டு விடக்கூடாதென்ற

உன் அச்சத்திலும் தொட்டு விட கூடாதென்ற

என் நடுக்கத்திலும் சிக்கிய கோப்பை

சிறிதே தள்ளாடியது !!!!



மௌனம் திரட்டி பழங்கதை பேசி

வெள்ளை அடிக்காத சுவரில் பல்லி பார்த்து

ஓரகண்களால் உயிர் தடவி

இனிமேலும் இங்கிருப்பின் கண்ணீரோடு

உண்மைகளும் கொட்டிவிடும் என்றஞ்சி

கும்பிட்டு வெளியேறி கடைசி

விடை சொல்ல ஜன்னல் கம்பிகளில்

உன்கண்கள் தேடிய போது

கார் கதவு சாத்த வந்த உன் கணவன்

சொன்னான்

நீங்களே அவளுக்கு தாலி கட்டியிருக்கலாம்



உன் போல் பெண்மக்கள் ஊர் உலகில் எத்தனையோ

காதலுற்ற சேதியினை காதலர்க்கு சொல்லாமல்

கணவருக்கு சொன்னவர்கள்