Wednesday, March 31, 2010

எனக்கு பிடிச்ச பெரிய கதை

அபரஞ்சிதா

தை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில்  இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த  புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது நேரத்திற்குள்ளாகவே புத்தகத்தில் மூழ்கிப்போனேன், மலை பாதையாதலால் மெல்லென புறப்பட்ட ரயில் அதே வேகத்தில் தான் சென்று கொண்டிருந்தது, மிக அரியவகை மரங்களாலும்,அழகிய மலைகளாலும் சூழப்பட்டதால் இந்த ரயில் பயணம் ஒரு ரம்மியமான உணர்வை ஏற்படுத்தி கொடுத்ததை ரசித்தபடியே ஜன்னல் பக்கம் திரும்பி லயித்து கொண்டிருந்தேன்,சட்டென என் கண்களை ஊடுருவி யாரோ என்னை பார்ப்பது போல் இருக்க எதிர்வரிசையை நோக்கினேன் .கால் மேல் காலிட்ட ஒருத்தி ”நாகாலாந் போஸ்ட்” எனும் நாகாலாந்தின் பிரபல பத்திரிக்கையை வைத்து தன் முகம் தெரியாதவாறு படித்துக்கொண்டிருந்தாள் அவள் என்னை பார்க்கவில்லை என ஊர்ஜிதம் ஆனது, அவளுக்கு நேர் மேல் இருக்கையில் சற்று பருத்த உடல் கொண்ட பெண்மணி என்னையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.அந்த அம்மாவிற்கு 40க்கும் குறையாமல் வயது இருக்கும்,இவ்வளவு கனத்த உடம்பு கொண்ட பெண்மணி எப்படி அங்கு ஏறி படுத்தாள் என்பதை பார்க்கமுடியவில்லையே என்ற வியப்பு தொற்றிக்கொண்டதை விரட்ட முடியவில்லை.அந்த பேப்பர் பெண்மணி மெதுவாக பேப்பர் மடித்து விட்டு கைபையில் இருந்து”குட்சா கவுந்” எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தாள்,[குட்சா கவுந் நாகாலாந்தின் மெது ரொட்டி ].அப்போது தான் பார்த்தேன் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை,என்ன ஒரு பேரழகு, என்ன ஒரு தேஜஸ் அவளை விட்டு என் கண்களை பிரிப்பதற்கு வெகு நேரம் எடுத்துக்கொண்டது மூளை.
ன்னையே பார்த்து கொண்டிருந்தவள் நான் அவளை பார்ப்பது தெரிந்ததும் தலையை சன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டாள். அவள் அந்த பக்கம் திரும்பினது கூட எனக்கு வசதியாய் போனது அவள் அழகை கண் கொண்டு ரசிக்கலாமே,நல்ல திக்கான மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள், இருக்கமாக இருந்திருக்கும் போல அடிக்கடி சரி செய்து கொண்டிருந்தாள்.பொசு பொசுவென கழுத்துக்கு சற்றே கீழே தள்ளி கோர்வையாய் வெட்டப்பட்ட தலைமுடி அனைத்தையும் இழுத்து ஒரே hair band ல் அடக்கியிருந்தாள், அவள் அழகு மாதிரியே திமிறிக்கொண்டிருந்தது hair bandல் அடைபட்ட தலைமுடிகளும்.
வளுடைய மேல் சட்டை இடுப்புக்கு சற்று கீழிறங்கி முடிந்துபோன இடத்தில் ஆரம்பித்த கால் பேண்டு தொள தொள வென தொடங்கி  இருக்கமாக முடிந்த இடத்தில் அழகான காலணி அணிந்திருந்தாள்.நடுநடுவே வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு ஆங்கிலம், ஹிந்தி,தெலுங்கு என கலந்துகட்டி பேசிக்கொண்டிருந்தாள், இதில் எனக்கு புரியாத இரு மொழிகளும் அடக்கம், பேச்சின் நடுவே அவளின் போதை தரக்கூடிய கண்கள் என்னை ஆராயமலில்லை, அவளின் ஒவ்வொரு பார்வையும் என் ஒவ்வொரு வயதாய் தின்று கொண்டிருந்தது,இன்னும் ஒரு முறை பார்த்தால் கூட முழுதுமாய் உடைந்து போய்விடுவேன் என்று ரத்தம் முழுக்க ஹார்மோன் திரவத்தை பீய்ச்சி அடித்தது.அடுத்த முறை அவள் பார்க்கும் போது கண்டிப்பாக பேசி விட வேண்டும் என ஆண்மைக்கான கூறுகளை தேடிக்கொண்டிருந்தது மனம், அவள் மதிக்கும் பெண்மையில் தான் ஒளிந்து கொண்டுள்ளது நான் மதிக்கும் ஆண்மை என நான் புரியும் கணத்தில் ஒரு பார்வை பாத்தபடியே கேட்டாள்” நீங்க தான சத்யா”? தூக்கிவாறி போட்டது எனக்கு, நான் தழுதழுத்த குரலில் ஆமா!! உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன்,தெரியும் அவ்ளோ தான் !! என்றவளை சும்மா விட முடியுமா?திரும்ப திரும்ப கேட்டதில் மேஜர் சார் என்னை வழியனுப்ப வருகையில் ”ஆல் தி பெஸ்ட் சத்யா” என கூறியதை நினைவுகூர்ந்தாள்.
ங்க பேர்? என கேட்டு முடிக்கும் முன்பாக “அபரஞ்சிதா” என முடித்தாள். உண்மையாவே நல்ல பேருங்க என்று சொல்லி முடிக்கையில் ஒரு பார்வை பாத்தாளே பாக்கனும்,என் கண்னை பார்த்து உன்னால் பொய் பேச வேறு முடியுமா என்பது போல் இருந்தது.
” அது எப்படி முதல் முறை
பார்க்கும் போதே ஆண்மையின் கூறுகள்
அழகு முன்பாக படு தோல்வி
அடைய முடியும் என்கறீர்களா?
இல்லை என்று வாதாடினால்,
நீங்கள் இது வரை அபரஞ்சிதா
போன்ற தேவதைகளின் தேவதையை
பாத்ததில்லை என்று அர்த்தம்”
கொல்கத்தா ரயில் நிலையத்தில் இறங்கி வெகு நேரம் பேசிகொண்டிருக்கும் போது தெரியவந்தது அவளின் இலக்கியம் மீதான ஆர்வம்.அசோகமித்திரன்,கோணங்கி என தொடங்கிய பேச்சு நீண்ட நேரத்திற்கு பிறகு நிர்வாண எழுத்தாளனில் வந்து முடிந்தது.வண்ண நிலவனின்” கடல் புரத்தில்” பற்றி ஒரு விவாதமே நடத்தி முடிக்கும் நேரத்தில், டைரியில் சிலவற்றை எழுதிக்கொண்டு அவளுக்கு தூக்கம் வந்ததாய் சொல்லி தூங்கி போனாள்.அவளின் ஒவ்வொரு பேச்சும் , தெளிவான சிந்தனையும் என்னை விட எனக்குள் இருந்த ரசனைகாரனுக்கு நிச்சயம் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என அறுதியிட்டு கூற முடியும், அவன் இன்று இரவுமுழுதும் உறங்கானிலை கொள்வான் என்பதும் திண்ணம். என்னுடைய டயரி குறிப்பில் தே.பா.நா என எழுதி விட்டு அவள் தூங்கி வெகுநேரம் அவளையே பாத்துக்கொண்டிருந்தவன் எப்போது உறங்கினேன் என தெரியவில்லை.
காலையில் எனக்கு முன்பாகவே எழுந்துவிட்டாள் போல நான் விழிக்கும் போது யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.ரயில் மெர்கம் பூர் நிலையம் தாண்டி ஆந்திராவை கடந்து கொண்டிருந்தது,நான் பல் தேய்த்துவிட்டு வந்ததும் எனக்கான காலை உணவை வாங்கி வைத்ததாய் கைகாட்டினாள், ஆனாலும் தொடர்ந்து அலைபேசியில் பேசியபடியே இருந்தாள்,அதில் இனி சடாச்சாரா வர முடியாது எனவும்,அங்கும் தனக்கு சென்னையில் கிடைக்க கூடிய அளவு தான் சம்பளம் தரப்படுவதாகவும் பேசிக்கொண்டு இருக்கையிலேயே அந்த இணைப்பை துண்டித்துவிட்டு அவள் அம்மாவிடம் இனி சடாச்சரா  ஒருக்காலும் வர மாட்டேன் எனவும் மாமாவை இது விஷயமாக என்னை தொல்லைபடுத்த வேண்டாம் எனவும் கூறினாள்,பேசி முடித்ததும் அவளிடம் கேட்டேன் அவளின் வேலை பற்றியும் சடாச்சாரா வருகை பற்றியும்,பேச்சின் தொடக்கமாக தன் தலைமுடியை வாரி சுருட்டி  குடுமி இட்டாள், குடுமியில் இருந்து பிரிந்துவந்த முடிகள் நான் இன்னும் கொஞ்ச நேரம் உன் முகத்தோடு உறவாடி கொண்டிருக்கிறேன் என்றவாக முகத்தின் மேல் படர்ந்து விரிந்திருந்தது.அடிக்கடி அந்த முடிகளை தன் விரல்களால் இழுத்துச்சென்று தன் காது இடுக்கில் விட்டுக்கொண்டிருந்தாள்.காது இடுக்கில் வழிந்த முடி காது மடல் வழியே கீழிறங்கி என்னை பார்த்துக்கொண்டிருந்தது.
காலை உணவை சாப்பிட்டு முடிக்கையில் மணி 11யை நெருங்கி கொண்டிருந்தது. அவளின் அழகுக்கு முன் மீண்டும் மீண்டும் படுதோல்வியை சந்தித்துக்கொண்டிருந்த என் சுயகட்டுபாடு ஒரு நேரத்தில் அவளின் சொல்லொண்ணா அழகில் மயங்கி விட்டதாக புலம்ப ஆரம்பித்த கணத்தில் அவள் முன் என் இருப்பை நான் இன்னும் நீட்டிக்கும் போது சுயகட்டுப்பாடே இருக்காது என்பதால் அங்கிருந்து வந்து ரயில் கதவு பக்கதில் நின்று கொண்டேன்.அங்கு வந்த TTR மாலை 6 மணிக்கு முன்பாக சென்னை சேர்ந்துவிடும் என ஆருடம் கூறினார்.ஒவ்வொரு நிமிடமும் அவள் என்னை முழுதாக உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அவளின் உள்வாங்கல் முற்றுப்பெறுவதற்கு முன்பாக அவளின்  28 மணி நேர அழகு என்னை பெரிதும் இம்சித்துவிட்டதாக  சொல்லிவிடுவதென முடிவு செய்த வண்ணம் இருக்கையில் வந்து அமர்ந்தேன்.என்னை எதிர்பாத்தவளாய் எங்க போயிருந்தீங்க? என்றாள்…
முதல் முறையாக சொன்னேன் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று ,சிறிதே வெட்க்கபட்டவளாய் உயர் தர ஆங்கிலத்தில் இரண்டு நிமிடம் பேசியிருப்பாள் அந்த உரையின் சாராம்சம் ஒரு குட்டி ஜென் கதையும், எனக்கான நன்றியும்.மாலை வரை என்னை பற்றி பல கேள்விகள் கேட்டு பத்திரப்படுத்திக்கொண்டாள்.மணி நான்கு நெருங்கும் போது ரயிலில் நிறைய தமிழ் வாசம் அடித்தது. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு என்றேன், அப்பொது அவள் முகம் சற்று வாடியிருப்பதை  பார்க்க முடிந்தது. இத்துனை நேரமும் எதிர் முனையிலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அவள் என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.சிறிது நேரம் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள், அவளுக்கு என்ன தோனியதோ முகம் கழுவிவிட்டு வந்தாள்,இப்போது இன்னும் அழகாய் இருந்தது எந்த விதமான செயற்கை தனமும் கலக்காத அந்த முகம். பொட்டுவைக்காம உங்க முகம் ரொம்ப அழகா இருக்குனு நான் சொன்னதுக்காக எடுத்த பொட்டைக்கூட வைக்காமல் மீண்டும் எதிரில் உட்கார்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்,நானும் அபரஞ்சிதா  மட்டுமே உணரக்கூடிய பூக்களில் இருக்கும் நிசப்தம் அங்கு நிறைவேறிக்கொண்டிருந்தது.இன்றைய டைரியில் இதை குறிக்க வேண்டும் என்று நான் நினைக்கும் போது அவள் ஏதோ குறித்துக்கொண்டிருந்தாள் அவளுடைய டைரியில்.
து வரை இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு எங்கள் இருவரையும் விளிம்பு நிலைக்கு தள்ளிக்கொண்டிருந்தது அதை உணர முடிந்ததே தவிர வார்த்தைக்குள் அடைக்க முடியவில்லை,”உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் என்றாள்” மதியத்திற்க்கு பிறகு அவள் என்னிடம் பேசிய முதல் வார்த்தை அது தான்,சொல்லுங்க அபரஞ்சிதா என்றேன், குட்சா கவுந் எடுத்த அதே கைபைக்குள் விட்டு அவளுடைய டைரியை எடுத்து என்னிடம் நீட்டினாள், அதன் அட்டை அவள் குடித்து வைத்த டீ டம்ளரின் நிறத்தில் இருந்தது ,நான் எதுக்கு என கேள்வி கேட்கும் முன்பாக இதுல என்னோட மொபைல் நம்பர் இருக்கு இந்த டயரிய முழுசா படிச்சு பாத்துட்டு எனக்கு கால் பண்ணுங்க, கால் பண்ண தோணலனா என்னோட முகவரி இருக்கு அதுக்கு டைரிய கொரியர் பண்ணுங்க சரியா என்று கேட்டாள், எனக்கு என்னவோ போல ஆகிவிட்டிருந்தது, மீண்டும் ஒரு முறை கேட்டேன் அபரஞ்சிதா, உங்களுக்கு என்ன முன்னாடியே தெரியுமா என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து சன்னல் பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள்,என்னை அவளுக்கு முன்னமே தெரிந்திருக்கும் என்பது போலத்தான் இருந்தது அவளின் இந்த கடைசி நிமிட செய்கைகள், இது வரை இயல்பாக இருந்தவள் என்ன ஆனது, ஏன் அவளுடைய டைரியை என்னை படிக்க சொல்கிறாள், அவளின் மெளனத்திற்கு காரணம் என்ன, என்னை முன்னமே தெரிந்திருந்தால்,எப்படி? ஏன்? விடை தெரியாத இத்தனை கேள்விகள் என் மனதில் இருக்கும் போதே அடுத்த 5 நிமிடத்தில் நான் இறங்க வேண்டிய ஆவடி வருவதாக காவலர் வந்து சொல்லி சென்றார். அவளுடைய டைரியை என் மடிக்கணிணி பையில் வைத்துக்கொண்டு இறங்குவதற்கு தயாராய் என் மற்ற உடைமைகளை எடுக்க தொடங்கிய போதும் அவளிடம் எந்த சலனமும் இல்லாமல் சன்னல் பார்த்து கொண்டிருந்தாள்.அவளுடைய டைரியில் கடைசி 2 நாட்களாக என்னை பற்றி என்ன எழுதியிருப்பாள் என்பதிலேயே என் கவனம் முழுதும் இருந்தது, அறைக்கு சென்றால் கார்த்தி படிக்கவிடமட்டான் என நன்றாக தெரியும்,அதனால் கடைசி இரண்டு பக்கங்களையாவது ரயில் கிளம்பி சென்றதும் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து படித்துவிட வேண்டும் என்ற ஆசையில் முண்டியடித்து கதவு பக்கம் நின்று கொண்டிருந்தேன். ஆவடியில் ரயில் 2 நிமிடம் மட்டுமே நிற்கும் என்பதால் அனைவரும் என்னுடைய கதியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.
மீண்டும் ஒரு முறை அவளை பார்க்க வேண்டும் என தோன்றியது அவசரமாக உள்ளே சென்று அவளை பாத்தால் சில நிமிடத்துக்கு முன்பு பார்த்த அதே நிலையில் இருந்தாள், அவளிடம் எதும் சொல்ல தோணாமல் மெளனமாய் திரும்பி பார்க்கையில் ரயில் நின்று ஒவ்வொருத்தராய் இறங்க ஆரம்பித்திருந்தார்கள். வண்டி கிளம்புவதற்கு முன் அவளை கீழே இறங்கி சன்னல் வழியாக பார்த்துவிடலாம் என எண்ணி கீழே அவசரமாக இறங்கி பார்க்கையில் அது 2 வகுப்பு குளிர்சாதனப் பெட்டியாதலால் எதுமே தெரியவில்லை நல்ல வேளை எனக்காக கதவருகே வந்து நின்று கொண்டிருந்தாள்,ஒரு புன்னகை பூத்து மடிக்கணிணியுடன் கூடிய அவள் டயரியை உயர்த்திக்காட்டினேன், ஒரு வசீகரிக்கும் புன்னகை ஒன்றை வீசின பிறகு ரயில் அவளை உள்ளிழுத்துக்கொண்டது.முன்பு தோன்றின எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என ஆர்வம் கொப்பளிக்க அருகில் இருந்த நடை மேடை இருக்கையில் அமர்ந்து மடிக்கணிணி பையில் இருந்த அவள் டைரியை எடுத்து முதல் பக்கம் புரட்டினேன், அதில் சிவப்பு கலர் மை பேனாவில் அழகான கையெழுத்தோடு எழுதப்பட்டிருந்தது “இது ஒரு விபச்சாரியின் டயரி குறிப்புகள்” என்று. டப் என தொண்டை குழியை ஏதோ அடைத்துக்கொண்டது ,நிமிர்ந்து பார்க்கையில் தொலை தூரத்தில் புள்ளியென மறையத்தொடங்கி இருந்தது அவளை உள்ளிழுத்துச்சென்ற ரயில் .

படிச்ச இடம்                : அடலேறு [http://adaleru.wordpress.com/2009/11/12/aparanjitha/]
சொல்ல நினைப்பது : நன்றி, அருமை அடலேறு ...........! 

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!