Saturday, January 2, 2010

ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை


ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.
*
அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
*
( ............ .............. ................. )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.
*
மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.
*
வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
*
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
*
கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!